பான் இந்திய திரைப்படமாக வெளியான ‘அனுமான்’ மூலம் இயக்குநர் பிரசாந்த் வர்மா பெரும் கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்தில் பிரசாந்த் வர்மா ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ் (பிவிசியு) உருவாக்கியுள்ளார். இந்த யுனிவர்ஸின் 3ஆவது படமாக ‘மஹா காளி’ என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. இது இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படமாக உருவாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மா எழுதியுள்ளார். ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் டுக்கல் தயாரிக்க, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொலுரு இயக்குகிறார். அவர் முந்தைய படமாக ‘மார்டின் லூதர் கிங்’ படத்தை இயக்கியிருந்தார்.
வழக்கமான கதையமைப்புகளை உடைக்கும் முயற்சியாக இந்தப் படம் கறுப்பு நிற பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று படக்குழு கூறியுள்ளது. படத்திற்கு சமரன் சாய் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தொன்மத்தின் அடிப்படையில் உருவாகும் மேஜிக்கல் ரியலிசம் படமாக ‘மஹா காளி’ உருவாகி வருவதால் மக்களிடையே இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்தில் பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ‘அனுமான்’ சமீபத்தில் ஜப்பானில் வெளியானது குறிப்பிடத்தக்கது.