தென்னிந்திய திரைப்பட உலகில் தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும், ரசிகர்களாலும் அதிகமாக தேடப்படும் முன்னணி நடிகராக மாறியுள்ளார். அவர் வில்லனாக நடித்தாலோ அல்லது முக்கிய குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்தாலோ கூட, அவருக்கென்று ஒரு தனித்துவமான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

இதற்கிடையில், பஹத் பாசில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற தகவலை, பிரபல மலையாள நடிகர் வினய் போர்ட் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். வினய் போர்ட், பிரேமம் படத்தில் சாய் பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் ஆசிரியராக நடித்தவர். தற்போது விரைவில் வெளியாகவுள்ள பஹத் பாசிலின் ஓடும் குதிரை சாதும் குதிரை என்ற திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
பஹத் பாசிலைப் பற்றி ஆச்சரியத்துடன் அவர் கூறியதாவது, “அவர் மிகவும் அடக்கமாக செல்போன் பயன்படுத்துகிறார். அவரிடம் ஒரு ஆண்ட்ராய்டு போனும் இல்லை. மேலும், அவருக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் எந்தவொரு கணக்கும் இல்லையாம். நாங்கள் பல நேரங்களையும் இன்ஸ்டாகிராமில் செலவழிக்கிறோம். ஆனால் பஹத் பாசிலுக்கு ஸ்மார்ட்போன் கூட இல்லாத நிலையில், அவரை நாடி இந்திய அளவிலான வாய்ப்புகள் எப்படி வருகின்றன? மற்றவர்கள் அவரை எப்படித் தொடர்புகொள்கிறார்கள்? என்பதெல்லாம் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது,” என கூறியுள்ளார்.