திரைப்படக் கதையின் தேவைப்படி மட்டுமே ஹீரோக்களை தேர்வு செய்யும் இயக்குநர்களில் ஒருவராக ஜீத்து ஜோசப் அடையாளம் பெற்றுள்ளார். முன்னணி நடிகர் மோகன்லாலை வைத்து தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்த அவர், அதன்பிறகு ‘நேர்’ என்ற ஹிட் படத்தையும் இயக்கினார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் இரண்டாம் நிலையாக விளங்கும் ஆசிப் அலியை வைத்து ‘கூமன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அதன் பிறகு, வளர்ந்து வரும் இயக்குநரும், நடிகருமான பஷில் ஜோசப்பை வைத்து ‘நுனக்குழி’ என்ற படத்தை இயக்கினார். ஜீத்து ஜோசப், மீண்டும் முன்னணி நடிகர்களுடன் கூட்டணி சேருவாரோ என்று எதிர்பார்த்தபோது, அவர் மீண்டும் ஆசிப் அலியுடன் இணைந்து ‘மிராஜ்’ (மிரட்சி) என்ற புதிய திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார்.
இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஏற்கனவே, ‘சண்டே ஹாலிடே’, ‘பி டெக்’, சமீபத்தில் வெளியான ‘கிஷ்கிந்தா காண்டம்’ ஆகிய படங்களில் ஆசிப் அலியுடன் இணைந்து நடித்துள்ள அவர், இது அவர்களுடைய நான்காவது கூட்டணியாகும்.இந்தப் படம் ஜனவரி 20ம் தேதி படப்பிடிப்பை தொடங்கியது. 48 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது ஜீத்து ஜோசப் இந்த படத்தை முழுமையாக முடித்துள்ளார். அடுத்ததாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகத்தின் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.