பாலிவுட்டில் 1975ல் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஷோலே. ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார். கல்ட் கிளாசிக் படமாக இப்போது வரை இந்திய சினிமாவின் பென்ச் மார்க் படம் என்று இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி 50 வருடமாகி உள்ள நிலையில் தற்போது சிட்னியில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் ஷோலே திரையிடப்படுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஷோலே படத்தில் இதுவரை நாம் பார்த்து வந்த கிளைமாக்ஸ் அல்லாமல் அந்த படத்திற்கு முதலில் ஒரிஜினல் கிளைமாக்ஸ் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கிளைமாக்ஸை இணைத்து இந்த திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட இருக்கிறது. இந்த தகவலை சிட்னி இந்திய சர்வதேச திரைப்பட குழு இயக்குனர் அறிவித்துள்ளார்.
இந்த படம் தயாரான சமயத்தில் படத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சஞ்சீவ் குமார் கதாபாத்திரம், வில்லனாக நடித்திருந்த அம்ஜத் கான் கதாபாத்திரத்தை சுட்டுக் கொல்வது போல் கிளைமாக்ஸை படமாக்கினார் இயக்குனர் ரமேஷ் சிப்பி. ஆனால் அப்போது எமர்ஜென்சி காலகட்டம் என்பதால் சென்சார் அதிகாரிகள் ஒரு காவல்துறை அதிகாரி சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளும் விஷயத்தை சென்சாரில் அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்களும் வேறு கிளைமாக்ஸ் எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். இதனால் வேறு வழி இன்றி கடைசியில் அம்ஜத் கான் கதாபாத்திரத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பது போன்று கிளைமாக்ஸை எடுத்து முடித்தார்கள். இப்போது வரை படத்தில் அந்த கிளைமாக்ஸ் தான் இருக்கிறது. இந்த நிலையில் தான் தற்போது இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் கிளைமாக்ஸ் காட்சியை இணைத்து வெளியிட இருக்கிறார்கள்.