குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு, தனது 64வது படத்தில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் நடிகர் அஜித்குமார். கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் தீவிரமாக பங்கேற்று வரும் அவர், துபாய், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்குப் பிறகு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். இங்கு நடைபெற்ற போட்டிகளில் அஜித்குமாரின் அணி மூன்றாவது பரிசை பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அஜித்குமார் கூறியதாவது: “கார் ரேஸ்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகு, சினிமா மற்றும் வெப் தொடர்கள் பார்க்க கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. விமானத்தில் பயணிக்கும் போதே எனக்கு ஓய்வு கிடைக்கிறது. அப்போதும் கூட பெரும்பாலும் தூங்கிக் கொண்டே இருப்பேன்.
முக்கியமாக, எனக்கு தற்போது தூங்குவதுதான் ஒரு பிரச்சனையாக உள்ளது. தூங்கினாலும் கூட ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். அந்த அளவுக்கு தூக்கக் குறைபாடு எனக்கு பிரச்னையாக உள்ளது” என தெரிவித்துள்ளார் அஜித்குமார்.