சமீபத்தில் தனது திருமணத்தை அறிவித்த நடிகை தன்யா ரவிச்சந்திரன், முக்கிய கதாநாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘றெக்கை முளைத்தேன்’. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ரசவாதி’ படத்திற்கு பிறகு, அவரது நடிப்பில் வெளியாக உள்ள அடுத்த படம் இதுவாகும். இதில் தன்யாவுடன் இணைந்து பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், மீரா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபாகரன் தயாரித்து, இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசையில் தரண் குமார் பின்னணிப் பாகங்கள் அமைக்க, பாடல்களுக்கு தீசன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கணேஷ் சந்தானம் கவனித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
இயக்குநர் பிரபாகரன் கூறும்போது, “நான் எப்போதும் ஒரே மாதிரியான படங்களை எடுத்துவரும் இயக்குநர் என்ற பொதுவான முத்திரையைச் சுமந்து வர விரும்பவில்லை. ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சி செய்வதையே எனது நோக்கமாக வைத்திருக்கிறேன். ‘றெக்கை முளைத்தேன்’ என்பது அந்த லட்சியத்தின் ஒரு வெளிப்பாடாகும். இதில் ஒரு பக்கம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, புதிய வாழ்க்கையின் சிறகுகளைப் பரப்ப முயற்சிக்கும் மாணவர்கள், மறுபக்கம், அதிரவைக்கும் குற்றச் சம்பவத்தைத் தீர்க்க முயற்சிக்கும் போலீஸ் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் – எனவே, படத்தின் தொடக்கத்திலிருந்தே முடிவுவரை பரபரப்பும், சுவாரஸ்யமும் குறையாது” என்றார்.