இசையமைப்பாளராகத் திரை உலகில் தனது பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் உயர்ந்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது, ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’, ‘மாயவன்’ போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இயக்கத்தில் ‘மார்கன்’ எனும் படத்தில் நடித்துள்ளார். குற்றவியல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இதற்காக படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் முழு தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் விஜய் ஆண்டனியிடம் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் பிரபலம் ஆகியிருக்கிறேன் என்பதற்காக அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் பற்றிய அறிவே இல்லை. தற்போது எனக்கு 50 வயது ஆகிவிட்டது, இனிமேல் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதனை அரசியல் வழியாகச் செய்ய விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.