2013-ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடித்த ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் சீன மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வெளியானது.
இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா இணைந்து நடித்த இந்த இரு திரில்லர் திரைப்படங்களும் பெரிய வெற்றியை பெற்றன. இதையடுத்து, ‘திரிஷ்யம் 3’ எனும் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளதாக ஜீத்து ஜோசப் அறிவித்திருந்தார். இதன் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் குறித்து ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஜீத்து ஜோசப், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு குறித்து ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இப்படத்தை தயாரிக்கும் ஆசீர்வாத் சினிமாஸும் ஒரு வீடியோவைக் வெளியிட்டு, அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என உறுதிபடுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “கடந்த காலங்கள் அமைதியாக இருப்பதில்லை. அக்டோபர் 2025 – கேமிரா ஜியார்ஜ் குட்டியின் பக்கம் திரும்புகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.