மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘தொடரும்’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது. அதனைத் தொடர்ந்து, சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படம் தற்போது வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. இதனுடன், தெலுங்கில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கண்ணப்பா’ திரைப்படமும் வரும் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மோகன்லால் மற்றும் மம்முட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்திருக்கும் ஒரு புதிய திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இதில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் எட்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் தொடங்கியுள்ளது. இதற்காக மோகன்லால் நேற்று முன்தினம் இலங்கை நோக்கி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இலங்கை பார்லிமென்டில் நடைபெற்ற நிகழ்வுகளை நேரில் பார்வையிடும் வகையில், அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். பார்லிமென்டில் மோகன்லாலின் பெயர் அழைக்கப்பட்டு, அவருக்கு மரியாதையாக வரவேற்பும் வழங்கப்பட்டது.
இதனுடன், இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமர சூர்யா, சபாநாயகர் டாக்டர் ஜெகத் விக்ரமாநாயகெ, துணை சபாநாயகர் டாக்டர் ரிஷ்வி சாலிஹ் மற்றும் பார்லிமென்டின் பொதுச்செயலாளர் குஸாணி மோகனதீரா ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக மோகன்லால் நேரில் சந்தித்தும் பேசியுள்ளார்.