மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைப்’ திரைப்படம் ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது, “தமிழ் மொழியிலிருந்தே கன்னடம் தோன்றியது” என தெரிவித்தார். இந்தக் கருத்து கர்நாடகாவில் கடும் எதிர்ப்பை எழுப்பியது. இதனையடுத்து, கர்நாடகாவில் இப்படத்தை திரையிடக்கூடாது என கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதிப்பதாக அறிவித்தது.

இதற்கெதிராக கமலின் நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையின் போது நீதிபதி, “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என கமல் கூறும் அடிப்படை என்ன? அதற்கான ஆதாரம் உள்ளதா?” எனக் கேட்டதோடு, “கமல் மன்னிப்பு கேட்டால் படத்தை திரையிடலாம்” என்றும் கூறினார். ஆனால் கமல் மன்னிப்பு கேட்க மறுத்ததால், படம் கர்நாடகாவில் வெளியிடப்படவில்லை.
இந்த சூழலில், மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தக் லைப்’ படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை விதித்த தடை அதிகாரத்திற்கு மீறியது என்றும், அந்த தடை நீக்கப்படவேண்டும் என்றும், படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். இதை ஏற்று, உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு மற்றும் கன்னட சினிமா வர்த்தக சபைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கூறியதாவது: “உரிய தணிக்கை சான்று பெற்றுள்ள ‘தக் லைப்’ திரைப்படத்தை மொழி விவகாரத்தை காரணம் காட்டி தடை செய்ய முடியாது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. இதுபற்றி வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும், “கமலின் பேச்சுக்காக அவரை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது; மன்னிப்பு கேட்க அவர் கட்டாயப்படுத்தப்படக்கூடாது; இது நீதிமன்றத்தின் வேலை அல்ல” என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.