தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குபேரா’. இப்படத்தின் “பிப்பி பிப்பி டம் டம் டம்” என்ற பாடலின் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய தனுஷ், “குபேரா என்பது ஒரு மாறுபட்ட படம். இது வழக்கமான படங்களைப் போலல்ல. இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இங்கே இருக்கிற எல்லோரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு விதமான விசித்திர அனுபவமாகவும், சிறப்பாகவும் இருந்தது. குப்பைக் கிடங்கு, குப்பை வண்டி என பல சூழ்நிலைகளில் நாங்கள் படப்பிடிப்பில் ஈடுபட்டோம். அந்த குப்பைக் கிடங்குகளில் நானும் ராஷ்மிகாவும் ஆறு முதல் ஏழு மணி நேரம் இருந்தோம். அதற்கிடையில் ராஷ்மிகா, ‘எனக்கெல்லாம் எந்த நாற்றமும் வரல’னு சொன்னாங்க. ஆனா எனக்கு அங்க நிக்கவே முடியலை. அது அளவுக்கு சிரமமா இருந்தது. அந்த சிரமங்களை மீறி நாங்கள் நடித்து முடித்தோம். ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஒரு பாடமாக மாறுகிறது.
இந்தப் படத்தில் நான் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறேன். அதற்காக நானே தனியாக ஆராய்ச்சி செய்தேன், ஹோம் வொர்க் செய்தேன் என்று பொய் சொல்ல மாட்டேன். உண்மையில், நான் படப்பிடிப்புக்குச் சென்று, டைரக்டர் சேகர் கம்முலா என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்தேன். அவருடைய திறமையால், அவரது நேர்மை மனதால், இந்த படத்தில் நடிக்கத் துணிந்தேன். அவர் இந்தக் கதையை வெறும் 20 நிமிடங்களில் சொன்னதும், உடனே ஒப்புக்கொண்டேன்.
நான் ஒரு நேரத்தில் மிகவும் கீழான நிலையில் இருந்தேன். இன்று நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன் என்றால் அது கடவுளின் அருளால் தான். இந்தப் படம் என்னை அந்த உலகத்தைப் பார்த்து, மீண்டும் என் பழைய நினைவுகளைத் தூண்டியதுடன், வாழ்க்கையின் சில உண்மைகளையும் உணர வைத்தது. எனவே, பல காரணங்களுக்காக இந்தப் படத்துக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என உருக்கமாகப் பேசினார்.