தமிழ் திரைப்படத்துறையில் எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கோமல் சர்மா. பின்னர், வைகை எக்ஸ்பிரஸ், ஷாட் பூட் 3, பப்ளிக் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை கோமல் சர்மா, ராஜசோழன் இயக்கிய ‘ஐ.ஏ.எஸ். கண்ணம்மா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசும் போது, “பெண்களின் முன்னேற்றம் என்பது மிக முக்கியமான ஒன்று. இன்று இந்தியாவில் கூட பெண்களின் கல்வி விகிதம் குறைவாகவே உள்ளது. பல ஊர்களில் 10ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி பயிலவே முடியாத நிலைதான் உள்ளது.
அதனால், அரசாங்கம் பெண்களுக்கு கல்லூரி வரை இலவச கல்வி வழங்க வேண்டும். பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணை விட ஆண்களுக்கு தான் கல்வியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது மாற்றப்பட வேண்டும். அரசு பெண்களுக்கு கல்லூரி வரை இலவசமாக படிக்கும் வாய்ப்பு அளித்தால், அவர்கள் கல்வி கொண்டு முன்னேற வாய்ப்பு உருவாகும்” என்றார்.