‘கிங்டம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தற்போது ‘ரணபலி’, ‘ரவுடி ஜனார்த்தனா’ என இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ‘ரணபலி’ திரைப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மற்றொரு படமான ‘ரவுடி ஜனார்த்தனா’வை ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது.
முதலில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ரணபலி’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு விஜய் தேவரகொண்டா மீண்டும் ‘ரவுடி ஜனார்த்தனா’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். கோதாவரி பகுதியை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.
—
