ரவிதேஜா, பிரியா பவானி சங்கர், சிறுமி நட்சத்திரா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கிய ‘இருமுடி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.200 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிவா நிர்வானாவின் அடுத்த படம் குறித்த பேச்சுகள் டோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகின்றன.
தனுஷ் ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் இரண்டு முக்கியமான வெற்றிகளை பதிவு செய்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கிய ‘சார்’ (வாத்தி) மற்றும் சேகர் கம்முலா இயக்கிய ‘குபேரா’ ஆகிய இரு படங்களும் தனுஷுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.
இந்த வரிசையில், சிவா நிர்வானாவும் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான முயற்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காலத்திற்கு முன்பே தனுஷிடம் சிவா நிர்வானா கதை கூறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரை நேரில் சந்தித்து படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தனுஷ் நடிக்கும் இந்த புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
—
