ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி’ திரைப்படம் தெலுங்கில் நல்ல வசூலை பெற்று வருகிறது. ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படும் இப்படம், தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தில் ரவி தேஜாவின் சம்பளம் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையின்போது ரவி தேஜாவுக்கு ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பாளர்கள் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு, தெலுங்கு சினிமாவின் முக்கியமான வினியோகப் பகுதிகளில் ஒன்றான நிஜாம் ஏரியாவையும் அவருக்கு வழங்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். ஆனால், நிஜாம் ஏரியாவை வாங்குவதற்கு அப்போது ரவி தேஜா தயக்கம் காட்டியதாக தெரிகிறது. அந்தப் பகுதியை வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக தனது சம்பளத்துடன் மேலும் ரூ.6 கோடியை சேர்த்து மொத்தமாக ரூ.13 கோடியாக வழங்குமாறும் அவர் கேட்டதாக சொல்லப்படுகிறது.
எனினும், தயாரிப்பாளர்கள் பேசி நிஜாம் ஏரியாவை ஏற்றுக்கொள்ள ரவி தேஜாவை சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது அதே முடிவு அவருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. நிஜாம் பகுதியில் மட்டும் படத்தின் வசூல் ரூ.50 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கூடுதலாக ரூ.6 கோடி சம்பளம் கேட்டிருந்த நிலையில், அதற்கு பதிலாக பெற்ற நிஜாம் ஏரியா மூலமாக சுமார் 50 கோடி வரை வருவாய் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் வேண்டாம் என நினைத்த அந்த ஏரியாவே தற்போது ரவி தேஜாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக மாறியுள்ளது.
