இயக்குநர் ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் தெலுங்கில் உருவானாலும், இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய முக்கிய படைப்புகளாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படங்கள் சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்று, சர்வதேச ரசிகர்களிடமும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளன.
சமீபத்தில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ராஜமவுலிக்கு, பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு திரையரங்கில் அவரது ‘ஈகா’ திரைப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. மேலும், அவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அந்தத் திரையரங்கில் அவரது பெயரில் நிரந்தர இருக்கையும் அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இன்ஸ்டிட்யூட் லூமியர் (Institut Lumière) அருங்காட்சியகத்தில், உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள சிறப்பு சுவரில் இயக்குநர் ராஜமவுலியின் பெயரும் நிரந்தரமாக பொறிக்கப்பட்டுள்ளது. அந்தச் சுவரில் குவென்டின் டரண்டினோ, மார்ட்டின் ஸ்கோர்செசி, கிளின்ட் ஈஸ்ட்வுட் உள்ளிட்ட உலக சினிமா ஜாம்பவான்களின் பெயர்களுடன் ராஜமவுலியின் பெயரும் இணைந்துள்ளது.இந்த அரிய கவுரவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ராஜமவுலி, உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றது மிகுந்த நெகிழ்ச்சியை அளிப்பதாகவும், இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமையாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
