தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய தமிழ் திரைப்படம் ‘மொத ராத்திரி’. இந்தப் படத்தில் ‘சிறை’ மற்றும் ‘யூத்’ திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் ரிஷிகாந்த், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி, எல். வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ராஜா கருப்பசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் ராஜா கருப்பசாமி, வழக்கமான திருமணக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திருமண விழாவை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்பாராத திருப்பங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிறைந்த ஒரு முக்கியமான இரவை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. புதிய வாழ்க்கையின் தொடக்கத்தை கொண்டாடும் மகிழ்ச்சியான நிகழ்வாக ஆரம்பிக்கும் அந்த இரவு, படிப்படியாக குழப்பமும் பதற்றமும் நிறைந்த சூழலாக மாறுகிறது.
அந்த ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்கள், அதில் தொடர்புடைய அனைவரின் வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றியமைக்கும் திருப்புமுனையாக அமைகின்றன என்றும் இயக்குநர் கூறினார். தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி முடிவடைந்தால், அடுத்த மாதம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
—
