ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் மூன்றாவது பாகமும் உருவாகியுள்ளது. நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குற்றப்புலனாய்வு மற்றும் திகில் அம்சங்கள் நிறைந்த இந்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற மே 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் மோகன்லால் பேசியபோது, “‘திரிஷ்யம் 3’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றால், ‘திரிஷ்யம் 4’ மற்றும் ‘திரிஷ்யம் 5’ திரைப்படங்களையும் உருவாக்க படக்குழு தயாராக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ‘திரிஷ்யம் 4’ திரைப்படத்திற்கு முன்பாகவே ‘திரிஷ்யம் 5’ உருவாக்கப்படும் என்ற திட்டமும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய மோகன்லால், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ், முந்தைய பாகங்களைப் போல இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தில் மோகன்லாலுடன் மீனா, எஸ்தர் அணில், அன்சிபா ஹாசன், ஆஷா சரத், சித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
