தெலுங்கு திரையுலகின் மூத்த மற்றும் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நாகர்ஜூனா. பல ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்து வரும் அவர், இதுவரை 99 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது 100வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தமிழில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தை நாகர்ஜூனாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகைகள் தபு, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுஷ்மிதா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். மேலும், இந்த படம் பீரியட் பின்னணியில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நடிகர் நாகர்ஜூனா ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்றும், நடிகை தபு முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
