1982ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பாலு மகேந்திரா எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான காலத்திலேயே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணே கலைமானே’, ‘பொன்மேனி உருகுதே’, ‘பூங்காற்று புதிதானது’ போன்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகின்றன. விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுகளைப் பெற்ற இந்த திரைப்படம், சிறந்த நடிகர் (கமல்ஹாசன்), சிறந்த ஒளிப்பதிவாளர் (பாலு மகேந்திரா) ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. மேலும், தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளிலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை (ஸ்ரீதேவி), சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த படம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது.
இவ்வாறு பல்வேறு பெருமைகளைப் பெற்ற இந்த திரைப்படம், 44 ஆண்டுகள் கழித்து தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த முறை திரையரங்குகளில் அல்லாமல், Amazon Prime Video தளத்தில் மே 1ஆம் தேதி இந்த புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
—
