சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த திரைப்படங்களைச் சுற்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், தற்போது தனது அடுத்தப்படமான 173-வது திரைப்படத்தில் நடிக்கத் தயாராக உள்ளார்.
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை முதலில் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்த திட்டம் மாற்றமடைந்து, ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அஷ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. இதற்கிடையில், மலையாள நடிகர் பாசில் ஜோசப் சமீபத்தில் “ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன், ஆனால் அதன் விவரங்களை இப்போது பகிர முடியாது” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் ‘தலைவர் 173’ படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனினும், இதுகுறித்து படக்குழுவின் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—
