மலையாளத் திரைப்பட உலகில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் மோகன்லால், இதுவரை 365-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தைத் தாண்டியும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள அவர், இன்றளவும் முன்னணி நடிகராக நாயகனாகவே பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது பழைய திரைப்படங்களைப் பற்றிய உணர்வுகளை பகிர்ந்துகொண்டார். “என்னுடைய சில பழைய திரைப்படங்களை இப்போது பார்க்கும் போது என் கண்கள் கலங்கிவிடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணத்தை விளக்கும்போது, “அந்த திரைப்படங்களில் என்னுடன் இணைந்து நடித்த பலர் இப்போது உயிருடன் இல்லை. அவர்களை அந்தக் காட்சிகளில் பார்க்கும் போது என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் வழிகிறது. நானும் ஒருநாள் இந்த உலகத்தை விட்டு செல்ல வேண்டியவன்தான். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், நான் கூட ஒரு சாதாரண மனிதன்தான்” என்று மனமுருகிய நிலையில் தெரிவித்துள்ளார்.
