தூத்துக்குடி துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லோக்கல் தாதா சால்ட் (பாகுபலி பிரபாகர்), சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் கேங்ஸ்டர் தி டெவி (சந்தோஷ் பிரதாப்) உடன் இணைந்து அம்மோனியம் நைட்ரேட் கடத்த திட்டமிடுகிறார். இதனை தடுக்கும் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரி சந்திரா (ஆண்ட்ரியா), மேலதிகாரிகளின் நெருக்கடியை சந்திக்கிறார். மற்றொரு புறம், துறைமுகத்தில் மெக்கானிக்காக வேலை செய்யும் சக்திவேல் (சரவணன்) தற்செயலாக சால்ட் உடனான மோதலில் ஈடுபடுகிறார். சக்திவேலின் பின்னணி சம்பவங்கள் சந்திராவுக்கு தெரியவருகிறது. சக்திவேலின் கடந்த காலம், அவருடன் இருக்கும் சிறுமி யார் போன்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் படம் ‘லீடர்’.
தனது முந்தைய படத்தில் இடம்பெற்ற அதீத கமர்ஷியல் தன்மையை இதில் இடம்பெறக்கூடாது என்பதில் தயாரிப்பாளர் லெஜெண்ட் சரவணன் உறுதியாக இருந்தார் என்பது படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் தெளிவாகத் தெரிந்தது. அதனை மனதில் வைத்து, இயக்குநர் துரை செந்தில்குமார், கண்ணை பறிக்கும் கலர்ஃபுல் ஃப்ரேம்கள் இல்லாமல், ஒரு டார்க் ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்கியுள்ளார். சரவணனை ஒரு அதீத பிம்பமாகக் காட்டாமல், ஓர் அழுத்தமான ஆக்ஷன் படத்திற்கு ஏற்ற அமைதியான கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார்.
ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான விறுவிறுப்பான தொடக்கத்துடனே படம் ஆரம்பமாகிறது. வில்லனின் பின்னணி, அடுத்து ஹீரோவின் வாழ்க்கை, துணை கதாபாத்திரங்களின் அறிமுகம் என காட்சிகள் தொடர்ச்சியாக நகர்கிறது. இதனால் திரைக்கதை இடைவேளை வரையிலும் எங்குமே தேங்கிவிடவில்லை. இடைவேளைக்கு முந்தைய 20 நிமிடக் காட்சிகள் பார்வையாளரை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இடைவேளைக் காட்சியும் பக்கா ‘மாஸ்’ ரகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
‘பாட்ஷா’, ‘தெறி’ போன்ற படங்களின் சாயல் உன்னதமாய் தெரிந்தாலும், இயக்குநர் அதை பயன்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் லாஜிக் மிகையாக மீறப்பட்டாலும், முதல் பாதி திரைக்கதையின் வேகம் அதனை பெரிய குறையாக உணர்த்தவில்லை.
முந்தைய படத்துடன் ஒப்பிடுகையில், சரவணனுக்கு இது பல படிகள் முன்னேற்றம் எனலாம். அளவுக்கு அதிகமாக நடிக்க முயலாமல், நடனம், நகைச்சுவை போன்ற விஷயங்களில் ஈடுபடாமல், இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துள்ளார். குறிப்பாக முந்தைய படத்தின் தோற்றம், நடிப்பு குறித்த விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இதில் முடிந்த அளவு தன்னை மெருகேற்றியுள்ளார். ட்ரோல்களைக் கவலைப்படாமல், தொடர்ந்து முயற்சி செய்யும் அவரை பாராட்டிக் கொள்ளலாம்.
