இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துவரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ராமாயணா’. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் ராமர் கதாபாத்திர அறிமுகக் காணொளி சமீபத்தில் (ஏப்ரல் 2) வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் ராமராக நடித்துள்ள ரன்பீர் கபூர், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை மறுத்ததாக தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், “சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது, உடனடியாக நான் இதில் நடிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
இதற்கான காரணத்தை விளக்கும்போது, “இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமானவன் அல்ல என்று நினைத்தேன். அந்தப் பாத்திரத்திற்கு முழுமையான நீதி செய்ய முடியாது என்ற பயம் இருந்தது. ஆனால், அந்தப் பயம் பின்னர் நன்றியுணர்வாக மாறியது. ஏனெனில், என் வாழ்க்கையில் இத்தகைய வாய்ப்புகள் மிகவும் அவசியமானவை. இந்தக் கதாபாத்திரத்தின் மீதும், ராமாயணக் கதையின் மீதும் எனக்கு அளவில்லா மரியாதையும் அன்பும் உள்ளது. ராமர் கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் படத்தில் நடித்தேன்” என்று அவர் கூறினார்.
