நாட்டின் உயரிய குடியரசு விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முந்தைய தினம் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2026ம் ஆண்டிற்கான பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சிலர் ஆங்கிலத்தில், சிலர் ஹிந்தியில், மற்றவர்கள் தமிழில் தங்களது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், அவர்கள் பயன்படுத்திய அதே மொழியிலேயே நடிகர் மாதவன் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்களுக்கு ஹிந்தியிலும், தமிழக முதல்வருக்கு தமிழிலும், இதர அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு ஆங்கிலத்திலும் அவர் தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.பத்மஸ்ரீ விருது பெற உள்ள நடிகர் மாதவனுக்கு, தமிழ் சினிமாவில் ‘ரன்’ திரைப்படத்தின் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் லிங்குசாமி என்பது குறிப்பிடத்தக்கது. லிங்குசாமி இயக்கிய முதல் திரைப்படமான ‘ஆனந்தம்’ படத்தின் கதாநாயகன் மம்முட்டி, தற்போது பத்ம பூஷண் விருது பெற உள்ளார். தனது முதல் மற்றும் இரண்டாவது திரைப்படங்களின் கதாநாயகர்கள் பத்ம விருதுகள் பெற்றிருப்பது குறித்து இயக்குநர் லிங்குசாமி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
