மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், த்ரிஷா, அபிராமி, நாசர் உட்பட பலர் நடிக்க முடிவாகி இருந்தனர்.
ஜனவரி மாதம் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த இயக்குநர் மணிரத்னம், இரண்டாவது கட்ட படப்பிடிப்பை செர்பியா நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கமல்ஹாசன் பிசியாக இருப்பதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், ஏற்கனவே ஒப்பந்தமான படத்தில் நடிக்க துல்கர் சல்மான் சென்றுவிட்டார். இந்தப் படத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துவிட்டார். இதனால், துல்கர் சல்மான் நடிக்க இருந்த பாத்திரத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார். இதை அறிந்த ஜெயம் ரவி இந்தப் படத்திலிருந்து வெளியேறி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
சிம்பு அந்தப் படத்தில் கமிட்டாவார் என்று ஜெயம் ரவி எதிர்பார்க்கவில்லை. சிம்பு வந்ததால்தான் ஜெயம்ரவி வெளியேறிவிட்டார் என்றும் அவர்கள் இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சினை என்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது.
சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கக்கூடாது என்பதில் ஜெயம்ரவி உறுதியோடு இருக்கிறார். அதற்கு காரணம் நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்த சென்ற போது சிம்புவும் ஜெயம்ரவியும் நண்பர்களாக ஒரே குழுவாகதான் இருந்தார்கள். வெளிநாட்டில் அவர்களுக்குள் நடந்த விளையாட்டுக்கள் வினையானது. செல்போன் உடைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் அரங்கேறின.
கலை நிகழ்ச்சிக்கு செல்லும் போது ஒன்றாக சென்றவர்கள் திரும்பும் போது பிரிந்தே வந்தார்கள். அப்போது முதல் சிம்புவுடன் பழகுவதை ஜெயம்ரவி நிறுத்திவிட்டார். அதனால், சிம்புவுடன் நடிக்க ஜெயம் ரவி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.