5656 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். அர்த்தனா பினு நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பயில்வான் ரங்கநாதன், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் என்.வி இசை அமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் நகுலின் உடன்பிறந்த அக்கா தேவயானி கலந்து கொண்டார். விழாவில் அவர் நெகிழ்ச்சியுடன் பேசியது: என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. எனக்கும் அவனுக்கும் நல்ல அன்பான உறவு இருக்கிறது. நகுல் எங்கள் வீட்டுக்குக் குட்டிப் பையன். அவன் எனக்குச் சின்னத்தம்பி. அவன் பல திறமைகள் உள்ளவன்.
நகுல் நல்ல திறமையான நடிகன். அவனுக்கு ஒரு நல்ல கதை வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும். நல்ல ஒரு கதைக்காக, நல்ல ஒரு இயக்குநருக்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான். எல்லாருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்வார்கள். அந்த நல்ல நேரத்திற்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வேன். அவனுக்கு நான் இன்றும் அம்மாதான்.

சின்ன வயதில் இருந்து துறுதுறு என்று இருப்பான். இன்று என் அப்பாவும், அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் இங்கே இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இங்கே நிரம்பி இருப்பதாக நினைக்கிறேன். அவனைச் சூழ்ந்து இருந்த கரிய புகைமேகங்கள் விலகி விட்டன. இனி அவனுக்கு நல்ல காலம் தான். நகுல் நீ எதற்கும் கவலைப்படாதே. அவனுக்கு ஆதரவு கொடுங்கள் என அவர் பேசினார்.