நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த நிலையில் தனது மக்கள் மன்றம் மூலமாக பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய். அந்த வகையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு உதவி செய்ய அவரது மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனை விஜய் மக்கள் மன்ற பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “விஜய்யின் உத்தரவுப்படி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, ரமலான் பண்டிகையை முன்னிட்டு நேற்று 300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.