ராஸ்கல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய த்ரில்லர் டைப் படம் ‘R-23-கிரிமினல்ஸ் டைரி’.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிப் படமாக இது உருவாகிறது. இயக்குநர் கவுதம் ராகவேந்திரா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
தான் நடித்த குறும் படத்திற்காக சைமா விருது பெற்ற வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆதித் சுந்தரேஸ்வர், ‘ஞானக் கிறுக்கன்’, ‘உன்னால் என்னால்’ ஆகிய படங்களில் நடித்த ஜெகா, சூப்பர் மாடலாக இருந்து சினிமாவில் நுழைந்து கவுதம் மேனன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து பாராட்டு பெற்ற ராகேஷ் சேது ஆகியோர் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
பிக்பாஸ் மூலம் ரசிகார்கள் மனதை கொள்ளையடித்த யாஷிகா, ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ர லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்ஸ்பெக்டர் ராயப்பன் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் கவுதம் ராகவேந்திரா பேசும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் மட்டுமல்ல, படத்தின் திரைக்கதையும்கூட இதுவரை வந்திராத புதுமையான ஒன்றுதான். திரைக்கதையில் இது ஒரு புது முயற்சி என்றும் சொல்லலாம். இந்த மாதிரி க்ரைம் த்ரில்லர் படம் தமிழ் சினிமாவில் அதிகம் வந்ததில்லை.
இதுல முக்கியமான அம்சம் என்னன்னா, படத்துல ஒவ்வொரு நிமிஷமும் முக்கியமானது. படம் பார்க்கிறவங்க. ஒரு நிமிஷத்த மிஸ் பண்ணினாலும், படத்தோட மொத்த கான்செப்ட் என்னன்னு அவங்களால சரியா புரிஞ்சுக்க முடியாது.
படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மிஸ் பண்ணாமல் பார்த்தால்தான் இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்னவென்று புரியும்…” என்றார்.
ஆக்சன் ரியாக்சன் பிலிம்ஸ் சார்பாக இந்தப் படத்தை ஜெனிஷ் வெளியிடுகிறார்.