ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களுருவில் எட்டு கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று, வருகின்ற 10ஆம் தேதி வெளியாகவுள்ள ’ஜெயிலர்’ படத்திற்காக தனது நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் விடுமுறை அளித்து ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்காக விடுமுறை வேண்டும் என எங்களது HR டிபார்ட்மெண்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் வருவதைத் தடுக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கிறோம். மேலும், எங்கள் பணியாளர்களின் சிரமத்தை குறைக்க அவர்கள் அனைவருக்கும் ’ஜெயிலர்’ படத்திற்கான இலவச டிக்கெட்களையும் நாங்கள் வழங்குகிறோம். இது எங்கள் நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும்’ என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ‘எங்கள் தாத்தாவுக்கும், எங்கள் அப்பாவிற்கும், எங்களுக்கும், எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்’ என்று சொன்னதோடு ‘ரஜினிகாந்த் வாழ்க’ என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.