தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், அதன் தயாரிப்பாளர் சுனில் நரங் ஓடிடி தளங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “குபேரா திரைப்படத்தை ஜூலை மாதத்தில் வெளியிட நாங்கள் கேட்டோம். ஆனால், ஓடிடி தளங்கள் ஜூன் 20-ம் தேதியே படம் வெளியாக வேண்டும் என்று வலியுறுத்தின. மேலும், தாமதமாகின் ஒப்பந்த தொகையில் இருந்து ரூ.10 கோடி குறைக்கப்படும் என எச்சரித்தனர்,” என கூறினார்.
மேலும், “நாங்கள் இப்போது இப்படங்களை உருவாக்க ஓடிடி தளங்களை நம்பி செயல் படுகிறோம். ஆனால், படத்தின் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், இந்த தளங்கள் அதிலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கின்றன. மெதுவாக, இவை சினிமா உலகில் அதிகாரம் செலுத்தும் நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொண்டு வருகின்றன,” எனக் கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.