தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, கடந்த காலத்தில் தனது தந்தையுடன் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார். தற்போது, அவர் தனி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பீனிக்ஸ்’. இந்தப் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். இதன்மூலம், அனல் அரசு இயக்குனராக தனது பயணத்தை துவக்குகிறார்.

பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணியாற்றுகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யாவுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத் மற்றும் நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி உரையாற்றியபோது, “என் மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. 2019-ல் அனல் அரசு இந்தக் கதையை எனக்கு கூறினார். ஆனால் அந்த நேரத்தில் அதை உருவாக்க முடியவில்லை. பின்னர், சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று அவர் கேட்டார். அது எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் பயமும் ஏற்படுத்தியது. எனவே, என் மகன் தனது முடிவுகளைத் தானாகவே எடுக்க வேண்டும் என எண்ணி, அவரை அந்தக் கதையை கேட்டுப் பார்க்கச் சொன்னேன்.
அதன்பின் அதன் தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை. என் சினிமா அனுபவங்களை என் குடும்பத்துடன் எப்போதும் பகிர்ந்துகொள்வேன். ஆனால் அவருடைய தேர்வுகளை அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதால், இந்தப் படத்தின் பூஜை மற்றும் பிற நிகழ்வுகளில் நான் எதிலும் பங்கேற்கவில்லை. அவ்வப்போது ‘சந்தோஷமாக இருக்கிறாயா?’ என்று கேட்பேன். அவர் ‘ஆம்’ என பதிலளிப்பார். அவருக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் நன்றிகள். அனல் அரசுவின் மூலமாக சூர்யா சினிமாவில் அறிமுகமாகும் நிகழ்வு எனக்கு பாக்கியமாகவும் தோன்றுகிறது. இங்கு வந்து என் மகனை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்த படம் நன்றாக வந்துள்ளது. என்னைவிட, என் மனைவிக்கு இது மிகப்பெரிய சந்தோஷத்தின் தருணம்” என்றார்.