1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அன்பே வா”. இத்திரைப்படத்தை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி இருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.
திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான செட் ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டது. செட்டை பார்க்க எம்.ஜி.ஆர். வந்தார்.
அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த ஒரு தொழிலாளியை பார்த்த எம்.ஜி.ஆர் அதிர்ந்து நின்றுவிட்டாராம்.
நேராக அவரிடம் சென்ற எம்.ஜி.ஆர், “அண்ணே, எப்படி இருக்கிறீர்கள்?” என கேட்டு அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார்.
அந்த நபர் அந்த தளத்தில் பேப்பர் ஒட்டிக்கொண்டிருந்ததால் அவரது கை நிறைய பசை இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் அதை எல்லாம் கண்டுக்கவில்லை.
அந்த நபரின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்துவிட்டதாம். உடனே தனது உதவியாளரை அழைத்த எம்.ஜி.ஆர், அந்த நபரை மேக்கப் அறைக்கு அழைத்துச் செல்லும்படியும், அவரை நான் சிறிது நேரத்தில் பார்க்க வருவதாகவும் கூறினார்.
பிறகு, “அந்த நபர் யார் தெரியுமா? நான் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கதாநாயகன் வேஷம் போட்டுக்கொண்டிருந்தவர். ஆனால் இவர் இங்கே ஸ்டூடியோவில் பேப்பர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார். இதனை பார்க்கும்போது என் மனசு தாங்கலை. அதனால் அவருடன் பேசிவிட்டு வருகிறேன்” என படக்குழுவினரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதன் பின் அந்த நபருக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.