ஸ்ரீசக்திவேல் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான முத்துமாணிக்கம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காகிதப் பூக்கள்.’
இந்தப் படத்தில் புதுமுகங்கள் லோகன் – பிரியதர்ஷினி இருவருடன் ப்ரவீண்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தில்லை மணி, தவசி, பாலு, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்தோஷ் நந்தா இசையமைக்க, சிவபாஸ்கர் கேமராவை கையாள, சுதர்சன் படத் தொகுப்பையும், பாலசுப்ரமணியம் கலை இயக்கத்தையும், ஸ்ரீசிவசங்கர் – ஸ்ரீசெல்வி இருவரும் நடன பயிற்சியையும், சுப்ரமணியன் தயாரிப்பு நிர்வாகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2020/11/kaakitha-pookal-2.jpg)
தயாரிப்பாளரான முத்து மாணிக்கமே இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
படப்பிடிப்பு நடத்துவதற்காக பொள்ளாச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து குழுவில் யாருக்கும் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றுடன்தான் சென்றுள்ளனர்.
ஆனாலும், அந்த கிராம மக்கள் படக் குழுவினரை ஊருக்குள் வரக் கூடாது என கட்டுப்பாடு விதித்து தடைபோட்டு விட்டனர். எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2020/11/kaakitha-pookal-1.jpg)
இதனால் மொத்த யூனிட்டையும் பொள்ளாச்சியில் தங்க வைத்துவிட்டு இயக்குநரும், தயாரிப்பாளருமான முத்து மாணிக்கமும், யாரிப்பு நிர்வாகியான சுப்ரமணியமும் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அந்த ஊர் மக்களிடம் அனுமதி பெற்று மொத்த யூனிட்டையும் அங்கு வரவழைத்து அந்த ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2020/11/kaakitha-pookal-4.jpg)
இந்தக் ‘காகிதப் பூக்கள்’ படம் பற்றி இயக்குநர் முத்து மாணிக்கம் பேசும்போது, “இது எனக்கு முதல் திரைப்படம். ஒருவனின் காதலி இன்னொருவனின் மனைவியாகலாம். அதே சமயம், ஒருவனின் மனைவி, இன்னொருவனின் காதலியாக முடியாது. அப்படி நடந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை கவிதையாக சொல்லும் படம்தான் இந்தக் ‘காகிதப் பூக்கள்.’ திரைப்படம்…” என்றார்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்தக் ‘காகித பூக்கள்’ திரைப்படம் விரைவில் பெரிய திரையில் வெளி வரவுள்ளது.