தமிழக முன்னாள் முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா மறைந்த வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருந்தார்.
எம்.என்.நம்பியாரின் தீவிர கடவுள் பக்தியும், வில்லனாக நடித்தாலும் அவரிடத்தில் இருந்த ஹீரோவுக்குரிய குணமும் ஜெயலலிதாவுக்கு அவரை மிகவும் பிடிக்க வைத்திருந்தது.
ஜெயலலிதா தன்னுடைய 60-வது வயது பிறந்ததையொட்டி சென்னையில் சோ ராமசாமி, முக்தா சீனிவாசன், கே.பாலாஜி, எம்.என்.நம்பியார் இவர்களின் வீடுகளுக்கெல்லாம் நேரில் சென்று அவர்களிடத்தில் ஆசி பெற்றார். அந்த அளவுக்கு நம்பியார் மீது ஜெயலலிதா ஒரு தனி மரியாதையே வைத்திருந்தார்.
ஜெயலலிதா நடித்துக் கொண்டிருந்தபோது அவரை ஒரு நாள் தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார் நம்பியார். வீட்டுக்கு வந்த ஜெயலலிதாவை டைனிங் டேபிளில் அமர வைத்து, வெள்ளித் தட்டில் அவருக்கு உணவு பரிமாறியிருக்கிறார் நம்பியார். இந்த வெள்ளித் தட்டில் சாப்பிட்ட பெருமையை ஜெயலலிதாவால் மறக்க முடியவில்லை.
சரியாக சில ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக ஆன பின்பு அவரை வாழ்த்துவதற்காக நம்பியார் தனது மனைவியுடன் போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போது அதே நம்பியாரை தன் வீட்டு டைனிங் டேபிளில் அமர வைத்து அதேபோல் ஒரு வெள்ளித்தட்டில் தானே உணவு பரிமாறினாராம் ஜெயலலிதா. அப்போது நம்பியாரிடம் ஜெயலலிதா, “நீங்க எனக்கு ஒரு நாள் உங்க வீட்ல இதே வெள்ளித் தட்டுல சோறு போட்டீங்க.. ஞாபகம் இருக்கா..? அதுக்குப் பதில்தான் இது..” என்று சொல்லி சிரித்தாராம் ஜெயலலிதா.
எம்.என்.நம்பியார் இந்த நிகழ்ச்சியினால் பெரிதும் மனமகிழ்ந்துபோய் அந்தச் சமயத்தில் தன்னைச் சந்திக்க வந்த அத்தனை பேரிடமும் “அம்மு எதையும் மறக்கலை. எல்லாத்தையும் அப்படியே ஞாபகம் வைச்சிருக்கு..” என்று சொல்லிச் சொல்லி பாராட்டினாராம்.