இயக்குநர் வசந்தபாலன் படம் என்றாலே நல்லசினிமாவை எதிர்பார்த்து ஏங்கும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அப்படியான தனித்துவமான படைப்புகளை வழங்கியவர் வசந்தபாலன்.
அவரது இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’, ‘வெயில்’ இரண்டுமே உலக சினிமாக்களுக்கு சவால்விடும் படங்கள். இடையில் ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ என இரண்டு சறுக்கல்கள். அதன் பின் ஏழு ஆண்டுகள் கழித்து இந்த ‘ஜெயில்’ மூலமாக வந்திருக்கிறார். ‘ஜெயில்’ ரசிகர்களை உள்ளிழுத்ததா?
படம் துவங்கும்போதே படத்தின் மையக் கருவை வசந்தபாலனின் குரல் பதிவு செய்கிறது. அந்தப் பதிவின்படி பார்த்தால் இக்கதை அடித்தட்டு மக்களுக்கு நிலம் மறுக்கப்படுவதால் அவர்கள் வாழும் காலனிகளே அவர்களுக்கு ஜெயிலாக மாறுகிறது என்பதே.
மேலும் நிலம் விட்டு நிலம் விட்டு தொடர்ந்து அடித்தட்டு மக்களை விரட்டும்போது அவர்களின் உளவியலும் மாறுபாட்டுக்குள்ளாகி சிலரை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது. அப்படிச் செல்லும் சிலரை அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதாக வசந்தபாலன் குரல் வழிக் கதை சொல்கிறது.
ஆனால் படத்தின் பயணமோ வேறோர் கோணத்தில் பயணிக்கிறது. படத்தின் துவக்கத்தில் ஹீரோ ஒரு திருடன் என காட்டப்படுகிறது. ஒரு ஐ போனை மிரட்டி திருடுவதில் ஆரம்பிக்கும் அவர் தொடர்ந்து திருட்டு வேலைகளைச் செய்கிறார்.
அவருக்கு ராமு என்ற போதைப் பொருள் விற்கும் நண்பனும் உண்டு. இன்னொரு நண்பரான பசங்க பாண்டி இவர்களோடு நட்பில் இருந்தாலும் தொழில் விசயத்தில் இவர்களிடம் இருந்து விலகியே நிற்கிறார். இந்த மூவரின் நட்பை ஒட்டி படம் பயணிக்கும்போது இவர்களின் எதிர்கேங் மூலமாக சில பிரச்சனைகள் வருகிறது.
அந்தப் பிரச்சனையை காவல் துறையும், அரசியல்வாதிகளும் ஊக்குவிக்கிறார்கள். அப்படி பெரிதாக வெடிக்கும் ஒரு பிரச்சனையில் ஜீவியின் நண்பர் ராமு இறந்துவிடுகிறார். அவரின் இறப்பிற்குப் பின்னால் இருக்கும் சதி வேலைகளை ஜீவி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
ஒரு திரில்லர் படம் போன்ற திரைக்கதையாக்கத்தால் படத்தை எதார்த்த சினிமாவாக பார்க்க முடியவில்லை.
படத்தில் ஜீவி பிரகாஷ் வடசென்னை வாலிபனாக நன்றாக நடித்துள்ளார். அவருக்கான காதல் காட்சிகள் மிக சுவாரசியமாக இருக்கிறது. நிச்சயம் அவை ரசிகர்களை ஈர்க்கும். நாயகியும் வடசென்னைப் பெண்ணாக மாறி ஆச்சர்யம் காட்டுகிறார்.
அவர் ஜீவி பிரகாஷை காதலித்ததுக்கு சொல்லும் காரணம் ரசனை. ராதிகா ஜீவியின் அம்மாவாக வருகிறார். அவரின் அனுபவம் அவரது நடிப்பில் வெளிப்படுகிறது. அவரது கேரக்டரை இயக்குநர் இன்னும் வலிமைப்படுத்தி இருக்கலாம்.
வில்லனாக வரும் ரவிமரியா பல இடங்களில் மிரட்டுகிறார். சில இடங்களில் அவரேதான் வில்லனா? காமெடியனா? என மிரள்கிறார். அவரது கேரக்டர்கள் போலவே நிறைய இன்ஸ்பெக்டர்கள் நிஜத்தில் இருப்பதால் அக்கேரக்டர் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது.
ஜீவி போலவே ராமு (இசை அமைப்பாளர் சிற்பியின் மகன்) ராக்கி என்ற கேரக்டரில் வாழ்ந்துள்ளார். ‘பசங்க’ பாண்டியும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். அவர் ஜெயிலில் இருந்து வந்து தன் அம்மாவைச் சந்திக்கும் இடம் உருக்கம். அவரது காதலியாக வரும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பும் அருமை. நல்லவேளை படத்தில் இந்தக் காதலர்களை வசந்தபாலன் பிரிக்கவில்லை.
படத்தில் நடிகர்களின் தேர்வும் அவர்களின் நடிப்பும் முத்திரைப் பதிக்கிறது. நடிகர்களை நடிக்க வைப்பதில் தானொரு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்து இருக்கிறார் வசந்தபாலன்.
படத்தின் பாடல்கள் படம் வெளியாகும் முன்பே பெரிய வெற்றி பெற்றிருப்பதால் பாடல் காட்சிகள் வரும்போதெல்லாம் உற்சாகம் பிறக்கிறது. பின்னணி இசையிலும் ஜீவி பிரகாஷ் அசத்தியிருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவைப் பற்றி தனிப்பதிவே எழுதலாம். சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் தனித்த ஆளுமை செலுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு கொலைக் காட்சியில் ஒளிப்பதிவு மிரட்டல்.
மிகவும் ஸ்ட்ராங்கான மையக் கதை இருந்தும் படத்தை ஒரு திரில்லர் பேட்டர்னில் கொண்டு போயிருப்பதுதான் சின்ன நெருடல். ஏன் என்றால் வசந்தபாலன் குரல் வழியாக சொன்ன கருத்து கதையில் பெரிதாக இல்லை. ஆனாலும் வசந்தபாலனின் ட்ரேட்மார்க் முத்திரைகள் படத்தின் இருக்கின்றன.
பெரிய எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுச் சென்றால் இந்த ‘ஜெயில்‘ படம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
RATINGS : 3.5 / 5