இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை இருட்டடிப்பு செய்திருப்பதாக அதிமுக கட்சியின் வட சென்னையின் தெற்கு, கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியாகிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரு.க்கும், விளையாட்டு துறைக்கும் தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க, முழுக்க தி.மு.க.வின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.
திரைப் பயணம் தொடங்கி அரசியல் பயணம்வரை விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவர் படங்களை முன் மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர்.
மான் கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, குதிரையேற்றம் என்று ஒவ்வொரு படத்திலும் தன்னை விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்தி கொண்டவர் எம்ஜிஆர் அவர்கள். முக்கியமாக குத்துச் சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜிஆர்.தான்.

1980-ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்து சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து முகமது அலிக்கு மீன் குழம்பு விருந்து பரிமாறினார். அந்த அளவிற்கு குத்து சண்டை மீது காதல் கொண்டிருந்தார் ‘பொன்மனச் செம்மல்’ எம்.ஜி.ஆர்.
திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர்., முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார்.

ஆனால் இந்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் தி.மு.க. ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்.ஜி.ஆர். விளையாட்டு வீரர்களை கை கழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலை என்பது வரலாற்றைவிட கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம்.

ஆட்சியில் இல்லாதவரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக் கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ..? அதிகாரம் மையம் இடத்தில் அடைக்கலமாக எதிர் கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்..? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல; கலைஞனுக்கும் அழகல்ல.
‘புரட்சித் தலைவர்’ எம்ஜிஆர் அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்று வரும் கதாபாத்திரங்கள் என்னை போன்ற என்னற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வர்த்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.
எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். அவர்களை இந்த ‘சார்பபட்டா பரம்பரை’ படத்தில் தவறாக சித்தரித்துள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்…” என்று கூறியுள்ளார்.