சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்`அயோத்தி’. “தமிழ் சினிமாவில் இப்படியொரு கதை வந்ததில்லை. வித்தியாசமான சினிமா” என்று வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில், படத்தின் கதை யாருடையது என்கிற சர்ச்சைகளும் எழுந்தது.
பட டைட்டிலில், கதை – எஸ்.ராமகிருஷ்ணனன் என பதியப்பட்டு இருந்தது. ஆனால், எழுத்தாளர் மாதவராஜ், ‘இந்தக் கதை என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். அதை வைத்து எழுதினேன். எஸ்.ராமகிருஷ்ணன் என் கதையை திருடிவிட்டார்’ என புகார் கூறினார்.
இந்த நிலையில், 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்பட போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன், போர் தொழில், ராவணகோட்டம், செம்பி, விடுதலை உட்பட 12 தமிழ் படங்களும் திரையிடப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. இதில் சிறந்த படமாக அயோத்தி படம் தேர்ந்தெடுக்ககப்பட்டது. படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.
மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.