லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடையும் சிறப்பான தருணத்தில் இப்படம் வெளியாகிறது.

இந்திய அரசியல்வாதிகளில் பலருடன் நட்புறவு கொண்டவர் ரஜினிகாந்த். அதில், அவரது நெருங்கிய நண்பரான ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர மாநில அமைச்சருமான நர லோகேஷ், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது வாழ்த்துச் செய்தியில், ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ரஜினி யுகத்தில் நாமும் ரசிகர்களாக வாழ்வதைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எங்கள் குடும்பத்தின் இருண்ட காலத்தில் அவர் அளித்த அசைக்க முடியாத ஆதரவைக் கடைசி வரை மறக்க மாட்டேன். கூலி படக்குழுவுக்கு மாபெரும் வெற்றி வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் கூலி படத்தின் முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை; அங்கு டிக்கெட் கட்டண உயர்வுக்கான அரசாணையை காத்திருக்கிறார்கள். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.