தமிழ் திரையுலகில் “மிருகம்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. அவருக்கு “ஈரம், அரவான், மரகத நாணயம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் உள்ளன. மேலும், சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நிக்கி கல்ரானியைக் காதலித்து திருமணம் செய்தவர் ஆதி.

இந்நிலையில், “ஈரம்” பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், ஆதி நாயகனாக நடித்துள்ள “சப்தம்” திரைப்படம் நாளை மறுநாள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாவுள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக ஆதி தெலுங்கிலும் பல பேட்டிகளை வழங்கியுள்ளார்.
அவற்றில் ஒன்றில், “நிக்கியுடனான எனது திருமண வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சில யூடியூப் சேனல்கள் ஆதாரமில்லாமல் விவாகரத்து வதந்திகளை பரப்புவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. காதலிப்பதற்கு முன்பும், திருமணமாகி கணவன்-மனைவியாக ஆன பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். எங்கள் இதயத்தால் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இப்படியான வதந்திகள் பரப்பப்படும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
முதலில் இது எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. ஆனால் நாளடைவில், வெறும் வருமானத்திற்காக சில யூடியூப் சேனல்கள் இப்படிப் பிரச்சாரங்களை நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை கவனிக்காமல் இருப்பதை பழக்கமாகக் கொண்டுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.