தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்த பெருமைக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆர், தற்போது இல்லை என்றாலும் இன்றைய தலைமுறையினரும் அவரின் சாதனைகள் மற்றும் அவரின் ஆட்சி குறித்து தெரிந்துகொள்ளும் அவர்க்கு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறார்.
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர் பொதுமேடையில் சக ஹீரோ ஒருவரின் காலில் விழுந்து வணங்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வெள்ளி விழா கூட்டம் நடைபெற்றது. மேடையில் எம்.ஜி.ஆர். கவர்னர், அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் மற்றும் தமிழகத்தில் சிறப்புமிக்க கலை மேதைகள் செம்மாங்குடி சீனிவாச ஐயர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி தேவி, பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா, திருமழலை கோவிந்தராஜ பிள்ளை, மற்றும் பலர் இருந்தனர்.
இந்த விழாவில் திரைப்பட விருதுகளை வழங்கி வந்த எம்.ஜி.ஆர். பழம்பெரும் நடிகர் சந்திரலேகா படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதாவுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு சட்டென்று அவரது காலில் விழுந்து வணங்கினார். இதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தாலும் கைத்தட்டல்கள் குறையவில்லை. அதன்பிறகு பேசிய எம்.ஜி.ஆர் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
இதில், 1938-ம் ஆண்டு நான் கல்கத்தாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோதுதான் செம்மாங்குடி சீனிவாச ஐயரின் இசைக்கச்சேரியை கேட்டேன். அந்த கச்சேரிக்கு என்னை அழைத்து சென்றவர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. இன்று 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றேன். மகாராஜபுரம் கிருஷ்ண மூர்த்தி எனது நண்பர்.
எம்.கே.ராதா அண்ணன் காலை தொட்டு நான் வணங்கியபோது நீங்கள் கைதட்டி ஆராவாரம் செய்தீர்கள். ஒரு முதல்வர் இப்படி செய்யலாமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அண்ணன் ராதா அவர்களிடத்தில் அவரது தந்தை கந்தசாமி முதலியாரை என் நடிப்புலக ஆசானை காண்கின்றேன். அதனால் தான் வணங்கினேன். அதுவும் நான் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற முறையில் தான் வணங்கினேன்.
எம்,கே.ராதா என்னை சிறிய வயதில் உடன்பிறந்த சகோதரனாக பார்த்தக்கொண்டார். ஒரு நாடக ஒத்திகையில் நான் சரியாக நடிக்கவில்லை என்பதற்காக என் நடிப்புலக ஆசான் கந்தசாமி முதலியார் ஓங்கி அறைந்துவிட்டார். அப்போது அண்ணன் ராதா எனக்காக அவர் தந்தையிடம் சண்டையிட்டார். இப்போதும் அந்த சம்பவம் என் கண்முன் இருக்கிறது. என் அண்ணன் என்ற முறையில் தான் அவரை வணங்கினேன் என்று கூறியுள்ளார்