விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்தர், அர்ஜூன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்களம் குறித்து பாலாஜி தரணிதரன் கூறுகையில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாத 1980களின் காலகட்டத்தைத் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் சமூகத்தின் உண்மையான முகத்தை செல்போனும் சமூக வலைதளங்களும் மறைத்துவிட்டதாக கருதியதால், அந்த காலகட்டத்தில் கதையை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாதி கதை மட்டுமே தயாராக இருந்தபோது, அதை முழுமையாக எழுதி படப்பிடிப்பை தொடங்கலாம் என விஜய் சேதுபதி கூறியதாகவும், அவர்தான் தயாரிப்பாளர் அட்லியை அறிமுகப்படுத்தியதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
1980களில் தான் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்தபோது பார்த்த, கேட்ட, அனுபவித்த சம்பவங்களின் தாக்கமே ‘பத்தா’ படத்தின் அடிப்படை என்றும் பாலாஜி தரணிதரன் கூறியுள்ளார். ‘பத்தா’ என்பது கதாநாயகனின் பெயர் என்றும், அது அவரது முழுப்பெயர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சில கதைகள் திட்டமிட்டு உருவாகும் நிலையில், சில கதைகள் எதிர்பாராத விதமாக தானாகவே உருவாகி நம்மை ஆச்சரியப்படுத்தும்; அப்படிப்பட்ட விதத்தில் உருவானதுதான் இந்தக் கதை என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு படத்தின் கதை வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதுடன், அதை கேட்கவும் பார்க்கவும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே ‘பத்தா’வை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார். மேலும், குழந்தைப் பருவத்தில் இருக்கும் இயல்பான அப்பாவித்தனம் எங்கோ ஒரு கட்டத்தில் தொலைந்து போகிறது. பின்னர் வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி, அதே அப்பாவித்தனம் மீண்டும் திரும்பினால் எப்படி இருக்கும் என்பதே இப்படத்தின் மையக்கரு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
–
