பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வரும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சந்தீப் வங்கா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ரோமாஞ்சகம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. வேணு கோபால் இயக்கியுள்ள இப்படத்தில் சுமந்த் பிரபாஸ் மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் விழாவில் ‘ஸ்பிரிட்’ தொடர்பான தனது கருத்தையும் சந்தீப் வங்கா பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘வாரணாசி’ படத்திற்கும் ‘ஸ்பிரிட்’ படத்திற்கும் இடையே 37 நாட்கள் மட்டுமே இடைவெளி இருப்பதாகக் கூறினார். பிரம்மாண்டத்தில் ‘வாரணாசி’ தங்களது படத்தைவிட பெரியதாக இருந்தாலும், வெளியீட்டு தேதிகளுக்கு இடையிலான இந்த கால அவகாசம் போதுமானது என்றும் தெரிவித்தார். மேலும், ‘ஸ்பிரிட்’ படத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது தணிக்கை குழுவிடமிருந்து ‘ஏ’ சான்றிதழே கிடைக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், தங்களது தயாரிப்பில் வெளியாகும் முதல் யு/ஏ சான்றிதழ் படமான ‘ரோமாஞ்சகம்’ திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
—
