காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். சர்வதேச போட்டியில் தமிழகத்தின் பெயரை உயர்த்திய அவருக்கு பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் சிம்ரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய ராஜா முத்துப்பாண்டி, தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அவரது இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், நடிகை சிம்ரனும் நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய சிம்ரன், ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை பெற்றுத்தரும் என்றும் கூறினார். குறிப்பாக ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அவர் தொடர்ந்து பதக்கங்களை வெல்ல வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.
