இயக்குநரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி, நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் இயக்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ளார். ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷம்’ போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றிருந்த ஆர்ஜே பாலாஜி, அண்மையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படமாக ‘கருப்பு’ திரைப்படம் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெற்றி, இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜியிடம், “நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் இயக்கும் திட்டம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உண்மையாகச் சொன்னால் தற்போது அதுபோன்ற எந்தத் திட்டமும் இல்லை. நான் அஜித் சாரை மனதில் வைத்து ஒரு சிறப்பான கதையை எழுதினாலும் அது திரைப்படமாக உருவாகுமா என்பது கூட தெரியாது. நான் தொடர்ந்து என்னுடைய எழுத்துப் பணியையும், இயக்குநர் பணியையும் செய்து கொண்டே இருப்பேன். ஒருவேளை அந்தக் கதை அஜித் சாருக்கு பொருத்தமாக அமைந்து, அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
