இயக்குநர் மாரி செல்வராஜ், அடுத்ததாக வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த திரைப்படம் தொடங்குவதற்கு இன்னும் சில கால அவகாசம் தேவைப்பட உள்ளதால், அதற்கிடையில் குறுகிய கால கட்டத்தில் முடிக்கக்கூடிய வகையில் ‘மஞ்சணத்தி’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த திரைப்படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். மேலும், படத்தில் ஒரு புதுமுக நடிகையும் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அந்த நடிகை யார் என்பது குறித்து படக்குழு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
இந்த திரைப்படத்தில் கயாடு லோஹர் நடிக்கவுள்ள கதாபாத்திரத்திற்கு அவர் முழுமையாக பொருந்துவாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஆரம்ப கட்டத்தில் மாரி செல்வராஜ் ஒரு டெஸ்ட் ஷூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த டெஸ்ட் ஷூட்டில் கயாடு லோஹரின் நடிப்பை பார்த்த மாரி செல்வராஜ் மிகவும் வியந்து அவரை பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் வெளியான பிறகு, கயாடு லோஹர் இதுவரை தனது திரைப்பயணத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் மறந்துவிடும் அளவுக்கு இந்த கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
