இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
அந்த புதிய திரைப்படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அந்தத் தேர்வில் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ரஜினிகாந்துடன் ‘தளபதி’, ‘சிவா’, ‘கோச்சடையான்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த ஷோபனா, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு இணையாக ரம்யா கிருஷ்ணன் நடித்துவருகிறார். ‘வேட்டையன்’ திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். ‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு இணையாக எந்த நடிகையும் இல்லையென கூறப்படுகிறது. மேலும், ‘அண்ணாத்த’, ‘தர்பார்’ திரைப்படங்களில் நயன்தாரா நடித்ததுடன், ‘பேட்ட’ திரைப்படத்தில் சிம்ரன் மற்றும் திரிஷா இணைந்து நடித்தனர். ‘காலா’ திரைப்படத்தில் ஈஸ்வரி ராவும், ‘கபாலி’ திரைப்படத்தில் ராதிகா ஆப்தேவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
