பழம் பெரும் நடிகையான ஜமுனாவின் வாழ்க்கை வரலாறும் படமாகப் போகிறது.
நடிகை ஜமுனா 1960 முதல் 1975-கள் வரையிலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தெலுங்கில் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’, சிவாஜி கணேசன் நடித்த ‘தெனாலிராமன்’, ‘தங்கமலை ரகசியம்’, ‘நிச்சயத்தாம்பூலம்’, ‘மருத நாட்டு வீரன்’, ஜெமினி கணேசன் நடித்த ‘மிஸ்ஸியம்மா’ உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார் ஜமுனா. இவர் கடந்த 1983-ம் ஆண்டு வெளிவந்த ’தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு கால ஓட்டத்தில் அம்மா வேடத்திலும் பல்லாண்டுகள் நடித்து வந்தார் ஜமுனா. இடையில் அரசியலிலும் நுழைந்து அதிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். தற்போது உடல் நலக் குறைவால் படங்களில் நடிக்க முடியாமல் இருக்கிறார்.
இந்தநிலையில் தற்போது நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக உருவாக்கப் போகிறார்கள். இத்திரைப்படத்தை தமிழ் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறதாம்.
இந்தப் படத்தில் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் தர வேண்டியிருந்ததால் சமந்தா மறுத்துவிட்டாராம். இதனால் தற்போது நடிகை தமன்னாவிடம் இது குறித்து படத் தயாரிப்புக் குழு பேசி வருகிறார்கள்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.