சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரொடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவர் 2015-ம் ஆண்டு ‘விசித்திரன்’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம்வரை புதுப்பித்து வந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’.
மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தை ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் இணைந்து தமிழில் தயாரித்து வருகின்றனர். இந்த ரீமேக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கும் ‘விசித்திரன்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். இதுதான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது.
தான் பதிவு செய்து வைத்துள்ள ‘விசித்திரன்’ என்னும் தலைப்பில் இயக்குநர் பாலாவும், ஆர்.கே.சுரேஷூம் படத்தை தயாரிக்க தடை விதிக்கக் கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.