நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘வள்ளி மயில்’.
1980-களின் நாடகக் கலையின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இவ்விழாவினில் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி பேசும்போது, “குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் இயக்குநர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற படமாக மாற்றினார். இந்த ‘வள்ளி மயில்’ படத்தின் திரைக்கதையை வெகு நாட்களாகவே பேசி கொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’. இந்தப் படம் திரைத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்..!” என்றார்.
நடிகை அறந்தாங்கி நிஷா பேசும்போது, ““சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2022/06/IMG-20220615-WA0080-1024x524-1.jpg)
கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும்.
விஜய் ஆண்டனி சார் மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ஃபரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார். ‘வள்ளி மயில்’ திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும்..!” என்றார்.
நடிகை ஃபரியா அப்துல்லா பேசும்போது, “நான் தியேட்டர் கலைஞராகத்தான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரனுடைய பொறுமைதான், இந்தக் கதை சிறப்பாக உருவாக காரணம். அவர் என்னிடம் கதை சொல்லும்போதே மியூசிக் எல்லாம் போட்டுக் காட்டினார், நான் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பித்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்..!” என்றார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2022/06/IMG-20220615-WA0081-1024x768-1.jpg)
நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “இந்தப் படத்தில் சுசீந்திரனிடமிருந்து நான் இயக்கத்தை கற்றுக் கொண்டேன். இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனித்திருக்கிறேன். படத்தை தரமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது…!” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை நான்கு வருடங்களாக நான் எழுதி வந்தேன். இந்தப் படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்து கொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர்தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
மறைந்த மலையாள நடிகையான கல்பனாவின் மகள் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு இந்தப் படம் முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி. அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும்…“ என்றார்.